Featured Posts

[Travel][feat1]

தேவதை கொடுத்த பரிசு

12:31

நெல்லிக்குப்பம் என்ற கிராமத்தில் இரண்டு மீனவர்கள் நண்பர்களாக இருந்தனர். ஒரு நண்பரின் பெயர் ஜெகதீஸ்; மற்றவன் பெயர் பிரகாஷ். இருவரும் தினமும் காலை நேரத்தில் கட்டு மரத்தில் ஏறி, மீன் பிடிக்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஒருநாள் காலை நேரத்தில் இருவரும் வழக்கம் போல் மீன் பிடிக்கச் சென்றனர்.

அன்றைய தினம் மாலை நேரம் ஆகியும் கூட இருவர் வலையிலும் போதுமான மீன்கள் சிக்கவில்லை; மிகக் குறைந்த அளவிலேயே மீன்கள் மாட்டின. கரையை அடைந்த இருவரும் தங்களுக்குக் கிடைத்த மீனைப் பங்கிட்டுப் பார்த்தனர்.

""நண்பனே, இந்த மீன்களை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் நம் இருவர் குடும்பத் திற்கும் போதிய உணவுப் பொருட்களை வாங்கிச் சமைப்பது கடினம். அதனால், மீன் விற்றுக் கிடைக்கும் பணத்தினை நம்மில் ஒருவரே எடுத்துக் கொள்ளலாம்,'' என்றான் பிரகாஷ்.

""அப்படியானால் நீயே எடுத்துக்கொள். நீதான் மனைவி, மக்களோடு இருக்கிறாய். உன் குடும்பத்தை வறுமையில் வாடவிடாதே.... நீயே எடுத்துக்கொள்,'' என்றான் ஜெகதீஸ்.

""இல்லை நண்பனே. உன் குடும்பத்தில் இரண்டு நபர்கள் அதிகமாக இருக்கின்றனர். அதனால் நீதான் எடுத்துக் கொள்ள வேண்டும்,'' என்றான் பிரகாஷ்.

""இல்லை நண்பனே, இல்லை கண்டிப்பாக நீதான் எடுத்துக் கொள்ள வேண்டும். உன் குடும்பத்தை வறுமை யில் தவிக்க நான் என்றுமே விடமாட்டேன்,'' என்று அழுத்தமாகக் கூறினான் ஜெகதீஸ்.

பிரகாஷும், ஜெகதீஸும் ஒருவரையொருவர் இவ்வாறு விட்டுக் கொடுக்காமல், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் திடீரென சத்தம் கேட்டது. இருவரும் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தனர். அங்கே கடற்கரையில் ஓர் அழகிய பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

அந்தப் பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் இருவரும் திகைப்புடன் வாயடைத்துப் போயினர். அந்தப் பெண் தேவதை போன்று காட்சி தந்தாள். அந்தப் பெண்ணின் முகத்தை இருவரும் உற்றுப் பார்த்தனர்.

""மீனவர்களே, என்ன அப்படிப் பார்க் கிறீர்கள்! நான்தான் இந்தக் கடலில் வசிக்கிற கடல் தேவதை. நீங்கள் இரு வரும் ஏதோ வழக்கு நடத்திக் கொண்டிருப் பது போன்று தெரிகிறது. அது என்ன வென்று அறிந்துகொள்ள வேண்டியே உங்கள் அருகில் வந்தேன்,'' என்றாள் கடல் தேவதை.

""தேவதையே! உன்னை சந்தித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இருவரும் பிடிக்கிற மீன்களை பங்கு போட்டுக் கொள்வோம். இப்போது எங்களுக்குக் குறைந்த அளவே மீன்கள் கிடைத்துள்ளன. என் குடும்பம் வறுமையில் வாடும், அதனால் மீன்களை எடுத்துக்கொள் என்கிறான் என் நண்பன்.

""என் குடும்பத்தைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், அவன் குடும்பம் வறுமையில் வாடக்கூடாது என்பதற்காகத்தான் எல்லா மீன்களையும் விற்று கிடைக்கிற பணத்தை என் நண்பன் எடுத்துக்கொள்ளட்டும் என்று சொல் கிறேன். என் நண்பனோ, அதனை மறுத்து என்னை எடுத்துக்கொள்ளும் படியாகச் சொல்கிறான். நீயே அவனுக்கு எடுத்துக் கூறி அவன் குடும்பத்தை வறுமையில் இருந்து காப்பாற்று!'' என்றான் பிரகாஷ்.

கடல் தேவதையோ சிரித்தபடியே இருவரையும் நோக்கியது.

""நீங்கள் இருவரும் ஒற்றுமையுடன் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் உங்கள் குடும்ப நலன் கருதியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் குடும்பத் தின் மீதும் நீங்கள் வைத்திருக்கும் அன்பும், உங்கள் நல்லெண்ணமும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அதனால் உங்கள் இரு வருக்கும் உதவி புரியவே வந்துள்ளேன்,'' என்றது கடல் தேவதை.

பிறகு, பிரகாஷ் முன்பும், ஜெகதீஸ் முன்பும் இரண்டு மூட்டைகள் தோன்றின. கடல் தேவதையும் அங்கிருந்து மறைந்தாள்.

இருவரும் அந்த மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அந்த மூட்டைகளில் நிறையப் பொற்காசுகள் காணப்பட்டன.

இருவருமே அதனை தங்கள் ஒற்றுமைக்குக் கிடைத்த பரிசாகவே நினைத்துக் கொண்டனர். அதைக் கொண்டு பெரிய பணக் காரர்கள் ஆயினர்.

தேவதை கொடுத்த பரிசு தேவதை கொடுத்த பரிசு Reviewed by piratha on 12:31 Rating: 5

ஓநாயும், ஆட்டுக்குட்டியும்

12:23
ஒரு ஆட்டுக்குட்டி ஓடிவரும் ஆற்றின் சரிவுப் பகுதியில் நீர் அருந்திக் கொண்டிருந்தது. மேல் பகுதியில் நீர் குடிக்க வந்தது ஒரு ஓநாய். ஓநாயை, ஆட்டுக்குட்டி பார்க்கவில்லை.

அதைத்தான் இரையாக்கிக் கொள்ளத் தீர்மானித்தது ஓநாய்.

""ஏன் இப்படித் தண்ணீரைக் கலக்குகிறாய்?'' என்று கேட்டது ஓநாய். அப்போது தான் ஓநாயைப் பார்த்த ஆட்டுக்குட்டி பயத்துடன் தண்ணீர் குடிப்பதை நிறுத்தியது.

""நான் எப்படி நீரைக் கலக்க முடியும்? தாங்கள் குடித்த மீதி தானே கீழ்ப்புறம் வரும்!'' என்று மெல்லிய குரலில் கேட்டது.

""பதில் பேசுமளவுக்குத் திமிராகி விட்டதா? நீ கலக்காவிடில் உங்கப்பன் கலக்கியிருப்பான்! உங்கப்பன் கலக்கா விட்டால், உன் பாட்டன் கலக்கியிருப்பான். உங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது!'' என்றபடி ஓட முயன்ற ஆட்டுக்குட்டி மேல் பாய்ந்து அதை இரையாக்கிக் கொண்டது.

துஷ்டர்களிடம் நியாயம் எடுபடாது. மவுனமாக ஒதுங்கிச் செல்வதே நன்மை தரும். காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எப்படியும் பேசுவர். அவர்களிடம் எல்லாம் வாய் பேசாமல் செல்வதே நலம்.
ஓநாயும், ஆட்டுக்குட்டியும் ஓநாயும், ஆட்டுக்குட்டியும் Reviewed by piratha on 12:23 Rating: 5

பச்சை பச்சையாய்!

12:20
ஆட்டுக்குட்டி ஒன்று காட்டில் மேய்ந்து கொண்டு இருந்தது. பசுமையான இலை, கொடிகள் கண்ட இடங்களில் எல்லாம், தம் விருப்பம் போல் ஆசையுடன் மேய்ந்தது.

சிறிது நேரத்தில் ஆட்டுக் குட்டிக்குத் தண்ணீர் தாகம் எடுத்தது. சுற்றிலும் கிணறு இருந்தது. ஆனால் எங்கும் தண்ணீர் கிடைக்க வில்லை. தாகம் மிகவும் வாட்டி வதைத்தது.

இன்னும் சிறிது தூரம் தள்ளிச் சென்று பார்த்தது. ஓர் இடத்தில் பெரிய கிணறு இருந்தது. கிணற்றுச் சுவரின் மேல் ஏறி உள்ளே எட்டிப் பார்த்தது.கிணற்றின் உள்ளே சிறிது தண்ணீர் இருந்தது. சுவற்றின் ஓரத்தில் பசுமையான புற்களும் வளர்ந்திருந்தன. அதைக் கண்டவுடன் ஆட்டுக்குட்டி நமக்குக் குடிக்கத் தண்ணீர் கிடைத்து விட்டதே என நினைத்து, அத்துடன் தண்ணீரைச் சுற்றி இருக்கும் பசுமையான புல்லையும் சாப்பிடலாம் என எண்ணி மகிழ்ந்தது.

கிணற்றின் உள்ளே ஓரமாக படியும் இருந்தது. அதன் வழியே மெதுவாக கீழே இறங்கிவிட்டது. பசுமையான புல்லை மேய்ந்து, தண்ணீரும் குடித்தது. கிணற்றின் அடிப்பகுதிக்கு சென்றது. சரி இனிமேல் மேலே செல்லலாம் என முயற்சி செய்து படிகளில் ஏறப் பார்த்தது. பாவம், அதனால் ஏற முடியவில்லை.

படிகளின் இடைவெளி அதிகமாகவும், உயரமாகவும் இருந்ததால் அதன் முன் கால்களை வைத்து மேலே ஏற முடியவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் கீழேயே விழுந்து விட்டது.

அதனால் கிணற்றின் மேலே ஏறிவர முடியவில்லையே என எண்ணி மிகவும் வேதனை அடைந்தது. தன் நிலையை நினைத்து, உள்ளே நின்று கத்திக் கொண்டே இருந்தது.

அந்த வழியே ஒரு குரங்கு வந்தது. கிணற்றுக்குள் இருந்து ஆடு கத்தும் சத்தம் குரங்கின் காதில் விழுந்தது.

"கிணற்றுக்குள் இருந்து தானே ஆட்டின் சப்தம் வருகிறது' என நினைத்த குரங்கு, கிணற்றில் எட்டிப் பார்த்தது. கிணற்றின் உள்ளே ஆட்டுக் குட்டியைப் பார்த்ததும், ""எப்படி உள்ளே குதித்தாய்?'' எனக் கேட்டது.

""தண்ணீர் குடிக்கத்தான் இப்படி கிணற்றுக்குள் இறங்கினேன். ஆனால், மீண்டும் என்னால் ஏறி வர முடியவில்லை.''

அதைக் கேட்ட குரங்கால் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை, ஆட்டுக் குட்டியின் நிலை கண்டு பரிதாபப்பட்டது.

""ஆட்டுக் குட்டியே... எந்தக் காரியத்தை செய்யும் முன், யோசித்த பின் செய்ய வேண்டும். ஆராயாமல் இப்படிச் செய்து விட்டு, சிரமப்படக் கூடாது. என்னாலும் உனக்கு உதவ முடியவில்லையே ... இருப்பினும் கிராமத்தினுள் சென்று துணைக்கு யாரையாவது அழைத்து வருகிறேன்...'' என்று கூறிச் சென்று விட்டது.

நீதி: கண்களுக்கு பார்த்ததும் அழகாக தோன்றுகின்ற எல்லாத்தையும் உடனே ஆசைபட்டுவிடக்கூடாது. அதைப்பற்றி நன்கு தெரிந்துகொண்டு தான் செயல்படணும். சரியா!
பச்சை பச்சையாய்! பச்சை பச்சையாய்! Reviewed by piratha on 12:20 Rating: 5

காவல்காரன்

12:18

பஞ்சமி நாட்டின் மன்னர் பஞ்சோபகேசன். இவர் புதிதாக அமைத்த அழகிய தென்னந் தோப்பைக் காவல் காக்க, பொறுப்பான ஆள் தேவை. அந்த வேலையை யாரிடம் ஒப்படைக்கலாம் என யோசனை செய்தார். அப்போது அவனுக்கு, விவேகன் நினைவு வந்தது. அரசவை கோமாளியான அவன் அங்கும், இங்கும் சுற்றி வருகிறான். எந்த வேலையும் செய்வது இல்லை. அவனுக்கு இந்த வேலையை கொடுப்பது என்று முடிவு செய்தார்.

""இந்த நிலத்தில் தென்னங்கன்றுகள் நடப் போகிறோம். இவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பு உன்னுடையது. இந்தக் கன்றுகளை இரவிலும், பகலிலும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். கவனமாக நடந்து கொள்,'' என்றார்.

""அரசே! நீங்கள் சொன்னது போலவே நடந்து கொள்வேன்,'' என்றான் விவேகன்.

அங்கே தென்னங்கன்றுகள் நடப்பட்டன. அவற்றிற்கு காவல் இருக்கத் தொடங்கினான் விவேகன்.

பகல் வேளையில், அவற்றைப் பார்த்துக் கொள்வது அவனுக்கு எரிச்சலாக இருந்தது. இரவு வந்தது. வீடு செல்ல வேண்டும். தென்னங்கன்றுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். என்ன செய்வது என்று சிந்தித்தான். நல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது.

தென்னங்கன்றுகளை எல்லாம் பிடுங்கி, ஒன்றாகக் கட்டினான். அவற்றைத் தூக்கி கொண்டு, தன் வீட்டிற்கு வந்தான். தன் கண் பார்வையிலேயே அவற்றை வைத்திருந்தான்.

பொழுது விடிந்தது. அந்தக் கன்றுகளைத் தூக்கிக் கொண்டு நிலத்திற்கு வந்தான். முன்பு இருந்தது போலவே அவற்றை நட்டு வைத்தான். பொழுது சாய்ந்ததும் அவற்றைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு, தன் வீட்டிற்குச் சென்றான். இப்படியே தொடர்ந்து நடந்து வந்தது.
ஒரு வாரம் சென்றது-

தென்னங்கன்றுகள் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக அரசர் அங்கு வந்தார்.

தென்னங்கன்றுகள் அனைத்தும் வாடிக்கிடப்பதைப் பார்த்தார்.

கோபம் கொண்ட அவர், ""நீ பொறுப்பாகத் தென்னந்தோப்பைக் காவல் காப்பாய் என்று உன் பொறுப்பில் விட்டேன். எல்லாக் கன்றுகளும் வாடிக் கிடக்கின்றன. என்ன செய்தாய்?'' என்று கத்தினார்.

""அரசே! நீங்கள்தான் இவற்றைப் பகலிலும், இரவிலும் நான் காவல் காக்க வேண்டும் என்றீர்கள். இரவில் நான் இவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று பாதுகாத்தேன். பகலில் மீண்டும் இவற்றை இங்கே நட்டேன். நீங்கள் சொன்னது போலவே நடந்து கொண்டேன். இவை ஏன் வாடி விட்டன! என்று எனக்கும் தெரியவில்லை,'' என்றான்.

இதைக் கேட்ட அரசர், "இவனிடம் போய் இந்த வேலையை கொடுத்தோமே...' என்று தலையில் அடித்துக் கொண்டார்.

"அப்பாடா! தப்பித்தோம்!' என, பெருமூச்சு விட்டான் விவேகன்

காவல்காரன் காவல்காரன் Reviewed by piratha on 12:18 Rating: 5
Powered by Blogger.